ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

பத்திய சமையல்!



பத்திய சமையல்!

சமையல் அரசி கீதா சம்பசிவத்தின் கை பக்குவம் (11)

எல்லாருக்கும் ஜுரமாமே? ஒரு பத்திய சமையல்!
இணையமே தகராறா இருக்குக் கொஞ்ச நாளா. கிடைக்கிற நேரத்திலே மனசிலே தோண்றதை எழுதறேன். நேத்திக்கு என்னோட சிநேகிதி ஒருத்தங்க மூக்கும், கண்ணும் சிவுசிவுனு இருக்கு, கீதா, என்ன பண்றதுனு கேட்டாங்க. 

நான் கூட வஸ்த்ரகலா வாங்கித் தராத கோபமோ இல்லை வருத்தமோனு நினைச்சேன். ஆனால் அது இல்லையாம். ஜலதோஷமாம். என்ன செய்யறதுனு கேட்டாங்க. தூதுவளையும், துளசியும் போட்டுக் கஷாயம் வச்சுச் சாப்பிடச் சொன்னேன். தூதுவளையே கிடைக்கலையாம், எப்படி இருக்குனும் தெரியாதாம். அப்புறமா அவங்களை விரலி மஞ்சளை விளக்கெண்ணெய் தடவி விளக்கிலே கறுப்பாகிற வரைக்கும் சுட்டுட்டு, அந்தப் புகையை உள்ளிழுக்கச் சொல்லிட்டு, அந்தக் கறுப்பான பொடியையும் பத்து மாதிரி நெத்தியிலே, மூக்கிலே போட்டுக்கச் சொன்னேன். தூதுவளை இருக்கே அதிலே கஷாயம் மட்டுமில்லைங்க ரசம் வச்சுக் கூடச் சாப்பிடலாம். எங்க வீட்டிலே இந்த மாதிரியான சில பைத்தியங்கள் அவ்வப்போது பிடிக்கும். மின்னல் இலை மோர்க்குழம்பு, முடக்கித்தான் தோசை,வேப்பம்பூ ரசம், தூதுவளை ரசம்னு அப்போ அப்போ வச்சுச் சாப்பிடுவோம்.

தூதுவளை தெரியுமா?? தூதுவளைனு ஒரு செடி இருக்கு. அதோட படம் போடறேன் பாருங்க. முள்ளு இருக்கும் செடியிலே, முள்ளுக் குத்திக்காம இலையை மட்டும் பறிச்சுக்குங்க. ஒரு கப் இலை இருக்கட்டும். சுத்தம் பண்ணிக்கணும். தண்ணியிலே போட்டுச் சுத்தம் பண்ணி வடிகட்டி வச்சுக்குங்க. புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக்குங்க. உப்பு தேவையான அளவு. மிளகு ஒரு ஸ்பூன், ஜீரகம் இரண்டு ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, அல்லது பெருங்காயப் பொடி. ஒரு மிளகாய் வத்தல். கருகப்பிலை கொஞ்சம். எல்லாத்தையும் எண்ணெய் விட்டுச் சட்டியிலே போட்டு வறுத்துக்குங்க. புளியைக் கரைச்சுக் கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும். வறுத்த எல்லா சாமானையும் அரைத்துக் கொள்ளவும். புளியை ஒரு ஈயச் சொம்பில் விட்டுக்கொள்ள வேண்டும். ஈயச் சொம்புன்னா என்னனு தெரியுமா?? அதை அடுப்பிலே ஜலம் விடாமல் வச்சால் அவ்வளவு தான். நீங்க வஸ்த்ரகலா வாங்கித் தரலைனா கண்ணீர் எப்படி விடுவீங்க?

அது மாதிரி ஈயச் சொம்பும் கண்ணீர் விட ஆரம்பிக்கும். அதனாலே புளி ஜலத்தை விட்டு, உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டுட்டு அடுப்பிலே வைங்க. நல்லாக் கொதிக்கட்டும். புளி வாசனை போகக் கொதிச்சதும், வறுத்து அரைச்சதைக் கலக்கவும். ஒரு கொதி வரும்போது தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சேர்த்து ஒரு நிமிஷம் கொதிக்கவிடவும். பின்னர் தேவையான அளவுக்கு ஜலம் விட்டு விளாவிக் கொள்ளவும். நல்ல ஜலதோஷம் இருக்கும்போது இந்த ரசம் வைச்சுச் சாப்பிட்டுப் பாருங்க, ஜலதோஷம் பட்டுனு விட்டுப் போகும். நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை தாளிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக